ஆந்திராவில் ஓடும் காரில் பெண் பலாத்காரம்: கத்தியால் குத்தி கீழே வீசிய கொடூரம்!
நகரி: ஆந்திராவில் பெண்ணை கடத்திச் சென்று ஓடும் காரில் நான்கு நாட்கள் பலாத்காரம் செய்த கொடூரர்கள், கத்தியால் குத்தி சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 42 வயது பெண்மணியை கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லூரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளது.

பெண்ணை கடத்திய அந்த கும்பல், அவரை 4 நாட்களாக காரிலேயே பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், ஓடும் காரிலேயே அந்த பெண்ணை 4 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த பெண், வாரங்கல் மாவட்டம் பன்றினி என்ற இடத்தில் காரில் இருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால், அந்த கும்பல் அவரை தப்பவிடாமல் கத்தியால் சரமாரியாக குத்தி காரில் இருந்து வீசிவிட்டு சென்றுள்ளனர். வயிற்றில் பல இடங்களில் கத்தி குத்துப்பட்ட அந்த பெண், குற்றுயிராக சாலையில் கிடந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையோரத்தில் கிடந்த அந்த பெண்ணை கண்ட அந்தப் பகுதிவாசிகள் உடனடியாக அவ்ரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நினைவு திரும்பாத நிலையில் அந்த பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அந்தப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பெண்ணை பலாத்காரம் செய்த கும்பலை தீவிரவமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications