சோகம் மறந்து புன்னகைப் பூ விரிந்த தருணம்.. மலப்புரம் முகாமில் நடந்த அழகு திருமணம்
Recommended Video
மலப்புரம்: மலப்புரத்தில் உள்ள நிவாரண முகாமில் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில் அந்த நிவாரண முகாமிலேயே அவருக்கு திருமணம் நடைபெற்றது.
கேரளத்தில் மழை , வெள்ளத்தால் 14 மாவட்டங்களிலும் தண்ணீர் தேங்கிவிட்டது. இதனால் ஏராளமானோர் வீடுகளையும் தங்கள் உடைமைகளையும் இழந்துவிட்டனர்.
இதையடுத்து லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
183 முகாம்கள்
இந்நிலையில் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சு. இவரது வீடு வெள்ளநீரில் மூழ்கியது. இதையடுத்து மலப்புரம் முழுவதும் உள்ள 183 முகாம்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
திருமணம் நிச்சயம்
அஞ்சு சிறுவயதில் படித்த பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் தன் குடும்பத்தினருடன் கடந்த 3 தினங்களாக தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு ஏற்கெனவே ஷாய்ஜூ என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கோயில் அறக்கட்டளை
மழை, வெள்ளத்தால் இவரது திருமணத்தை நடத்துவதா அல்லது தள்ளிபோடுவதா என்ற சந்தேகத்தில் இவரது பெற்றோரும் உறவினரும் குழம்பியிருந்தனர். இந்நிலையில் திரிபுராந்தகா கோயில் அறக்கட்டளை இவரது திருமணத்தை நடத்த முன்வந்தது.
திருமணம்
எனவே குடும்பத்தினரும் திருமணத்தை குறித்த தேதியில் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கு அவர் படித்த பள்ளியும் தங்கியிருந்த நிவாரண முகாமுமான எம்எஸ்பி எல்பி பள்ளியில் திருமணம் நடைபெற்றது.
மற்ற முகாம்களிலும் திருமணம்
வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்த முடியாமல் போய்விடுமோ என்று வேதனையில் இருந்த குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருநயவா மற்றும் நிலம்பூர் முகாம்களிலும் திருமணங்கள் நடந்தேறின.