14 வயது சிறுமியை கணவன் பலாத்காரம் செய்ய உதவி செய்த மனைவி
போபால்: 14 வயது சிறுமியை மூன்று மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர். இதற்கு அவரது மனைவியே உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டம் கணேசபுரா மொகல்லா பகுதியை சேர்ந்தவர் ஐம்பது வயதான பாப்பு கவாடியா. இவரது மனைவி அமீனா. இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த 14 வயது சிறுமி பாப்பு கவாடியா வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். 4 மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் அந்த சிறுமி வீட்டுக்கு வந்தபோது, படுக்கையறைக்குள் அழைத்துச் சென்ற அமீனா, திடீரென கணவனையும் சிறுமியையும் அறைக்குள் விட்டுவிட்டு வெளியே வந்து கதவை பூட்டிவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சிறுமியை பாப்பு கவாடியா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டி அடுத்தடுத்த நாட்களிலும் சிறுமியிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியின் வயிறு பெரிதாகிக் கொண்டு சென்றதை பார்த்த அவளின் பெற்றோர் அதட்டிக் கேட்டபோது, நடந்த சம்பவத்தை அச்சிறுமி கூறியுள்ளாள். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் பாப்பு கவாடியாவையும், அவரது மனைவி அமீனாவையும் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களில் மனைவியே கணவனுக்கு உடந்தையாக இருப்பது சமீப காலத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இம்மாநிலத்தின் சபால்கர் பகுதியில் 30 வயது பெண், தனது கணவன் மற்றும் நண்பன் ஆகியோர் இணைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டார்.