பொது மேடையில் சித்தராமையா கன்னத்தில் பச்சக் கொடுத்த பெண்...!
பெங்களூரு: பெங்களூருவில் நடந்த பொது நிகழ்ச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் கன்னத்தில் பெண் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் சித்தராமையா நடந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது கன்னத்தை துடைத்தபடி நிகழ்ச்சியில் இயல்பாக பங்கேற்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு கர்நாடக மாநில குருபா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெங்களூருவில் உள்ள பேலஸ் மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் சித்தராமையா தலைமை தாங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும் புதிய உறுப்பினர்கள் அனைவரும், முதல்வர் சித்தராமையாவுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அப்போது சிக்மகளூர் மாவட்டத் தின் அம்ருதபுராவில் உள்ள தரிகேரே தாலுகா பஞ்சாயத்து உறுப்பினரான கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்பவர் முதல்வருடன் நெருக்கமாக நின்றிருந்தார். திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென முதல்வர் சித்தராமையாவின் கன்னத்தில் கிரிஜா முத்தமிட்டார்.
சித்தராமையாவும் அந்த பெண் கொடுத்த முத்தத்தை இயல்பாகவே வாங்கிக்கொண்டார். இதனால் விழா மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் முதல்வர் சித்தராமையா தனது கன்னத்தை துடைத்தபடியே நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சித்தராமையா குருபா சமூகத்தை சேர்ந்தவர். முத்தமிட்ட பெண்ணும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு பாசத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த கிரிஜா, ‘‘முதல்வர் சித்தராமையாவும் எங்களது சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இதனால் நாங்கள் அவரை எங்கள் சமூகத்தின் சிங்கம் என அழைப்போம். மேடையில் அவருக்கு அருகில் நின்றிருந்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன்.
எனது குடும்பத்தினரும், நானும் அவரை எப்பொழுதும் அப்பா என்று தான் அழைப்போம். அந்த பாசத்தி லும், மகிழ்ச்சியிலும் தான் அவரது கன்னத்தில் முத்தமிட்டேன் என்று கூறியுள்ளார். முதல்வர் சித்தராமையாவும், அந்த பெண் தனது மகளை போன்றவர் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கர்நாடகாவில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிதாக 13 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பதவியை இழந்த சீனிவாச பிரசாத், அம்பரீஷ் உள்பட அதிருப்தியாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்கியே தீர வேண்டும் என்று அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் பணியில் சித்தராமையா இறங்கியுள்ளார்.
இந்த பரபரப்புக்கு இடையே சித்தராமையாவை பொது மேடையில் பெண் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications