போபாலில் ஓடும் பேருந்தில் பெண் கதறக் கதற பலாத்காரம்: டிரைவர் உள்பட 3 பேர் கைது
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 35 வயது பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 35 வயது பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தை சல்லு என்பவர் ஓட்டியுள்ளார். தீபக் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார்.
பேருந்தில் இருந்த பயணிகளில் அந்த பெண் மற்றும் ராஜு என்பவரைத் தவிர மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றுவிட்டனர். அந்த பெண்ணும் கீழே இறங்க முயன்றபோது பேருந்தை திருப்பிக் கொள்கிறேன் அதன் பிறகு இறங்கிச் செல்லுங்கள் என்று டிரைவர் சல்லு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேருந்தில் இருந்த அந்த பெண்ணை தீபக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதற்கு சல்லுவும், ராஜுவும் உதவி செய்துள்ளனர். அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு அவரை வருமான வரித்துறை அலுவலகம் அருகே இறக்கிவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சல்லு, தீபக், ராஜு ஆகிய 3 பேர் மீதும் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் சல்லு ஓட்டிய பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.