தூய்மை பணியாளர் டூ துணை கலெக்டர்.. வீதிகளை மட்டுமல்ல.. 'விதிகளையும்' துடைத்தெறிந்த ஆஷா!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூரின் வீதிகளைத் துடைத்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் ஆஷா கந்தாரா என்ற பெண் சமீபத்தில் ராஜஸ்தான் நிர்வாக சேவைத் தேர்வில் ( RAS)தேர்ச்சி பெற்றார். விரைவில் அவருக்கு துணை கலெக்டர் பதவி வழங்கப்பட உள்ளது. வீதிகளை மட்டுமல்ல விதிகளையும் துடைத்தெறிந்த ஆஷா, அவமானங்களை உரமாக்கி சாதனைகளை சாத்தியமாக்கி உள்ளார்.
Recommended Video
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு எழுதிய ஆஷா, கொரோனா காரணமாக ஏற்பட்ட தாமதம் காரணமாக தேர்வு முடிவுகள் இப்போதுதான் வெளியாகி உள்ளது. விரைவில் துணை கலெக்டராக பதவியேற்க உள்ளார். கடின முயற்சியால் இந்த நிலையை ஆஷா எட்டியதன் மூலம் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உத்வேகமாக இவர் மாறி உள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவரிடமிருந்து பிரிந்த ஆஷா, வறுமையின் துயரப்பிடியில் இருந்தார். அந்த வறுமையிலும் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சுமந்துகொண்டு பட்டப்படிப்பை முடித்தார்.
செம திருப்பம்.. புதுச்சேரியிலிருந்து கிளம்பும் தமிழிசை.. புதிய துணை நிலை ஆளுநர் இவரா? பரபர தகவல்
ஆர்ஏஎஸ் தேர்வு
அந்த நேரத்தில் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஜோத்பூரில் கிடைத்த தூய்மை பணியாளர் வேலையை ஏற்றுக்கொண்டார். தினமும் ஜோத்பூர் நகர வீதிகளை சுத்தம் செய்தபடி குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு ஆர்ஏஎஸ் தேர்வுக்கு விடாமல் படித்தார். ராஜஸ்தான் நிர்வாக சேவைத் தேர்வில் ( RAS) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கலந்து கொண்டார் ஆஷா.
ஆஷா தேர்ச்சி
கொரோனா காரணமாக தேர்வு முடிவுகள் இரண்டு வருடம் கழித்து தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஆஷா தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு துணை கலெக்டர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் துணை கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் தூய்மை பணியாளர் பொறுப்பில் இருந்து துணை ஆட்சியராக பதவியேற்க உள்ளார்.
உத்வேகம் இதுதான்
இது தொடர்பாக டைம்ஸ் நவ் பத்திரிகைக்கு ஆஷா அளித்த பேட்டியில், " சமூகத்தில் எதிர்கொண்ட பாகுபாடு தான் இறுதியில் தனது வாழ்க்கையை மாற்றுவதற்கான உத்வேகமாக அமைந்தது . என்னால் அடைய முடிந்த அனைத்தும் என்னுடைய கடின உழைப்பின் விளைவால் நடந்தது என்று நம்புகிறேன்.
நடக்கவில்லை
நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக விரும்பினேன். ஆனால் வயது தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக ஐஏஎஸ் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு கிடைத்த இந்த புதிய தகுதி (துணை கலெக்டர்) மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதே என் நோக்கம். உதவி தேவைப்படும் மக்களுக்கு எனது வழங்கப்பட்ட பொறுப்பின் மூலம் கிடைக்க செய்வேன்" என்று கூறினார்.
கேரள பெண்
முன்னதாக கேரளாவைச் சேர்ந்த அனி சிவா என்ற ஒற்றைத் தாய் (கணவனால் கைவிடப்பட்டவர்) திருவனந்தபுரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக அண்மையில் பொறுப்பேற்றார். அதற்காக தனக்கு எதிராக மலைபோல் குவிந்து இருந்த அனைத்து கஷ்டங்களையும் வென்று சாதித்தார்.
ஐஸ்கிரீம் விற்றார்
காவல்துறை அதிகாரியாக விரும்பிய ஆனி சிவாவை, கைக்குழந்தைகளுடன் இருக்குபோதே அவரது கணவர் கைவிட்டார். அதன்பிறகு, சோப்பு மற்றும் சோப்புப் பொடியை விற்று, வீட்டுக்கு வீட்டு மளிகைப் பொருட்களை விற்று வாழ்க்கையை நடத்தினார். ஐஸ்கிரீம் மற்றும் எலுமிச்சைப் பழத்தையும் வாழ்வாதாரத்திற்காக விற்றார். இந்த பணிகளை செய்து கொண்டே சமூகவியலில் பட்டம் பெற்றார்.
எஸ்ஐ ஆக மாறினார்
பின்னர், 2019 ஆம் ஆண்டில், காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்று கனவுகளுடன் அதற்கு தயாரானார். ஒன்றரை ஆண்டுகள் கடின முயற்சியின் விளைவாக திருவனந்தபுரத்தில் துணை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார். அவமானங்களை உரமாக்கி முயற்சி செய்தால் சாதனைகள் கண்டிப்பாக சாத்தியமாகும் என்பதற்கு இந்த பெண்கள் சிறந்த உதாரணம். எத்தனை பெண்கள் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இவர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.