நண்பர்களிடையே கார் ரேஸ்: பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பரிதாப பலி
புனே: புனேவில் நண்பர்களுக்கு இடையேயான கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 25 வயது பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் க்ருதிகா நந்தலஸ்கர்(25). சாப்ட்வேர் என்ஜினியர். அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர் சுமித் வாஞ்சரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வாஞ்சரியின் வீட்டிற்கு க்ருதிகா தவிர்த்து சன்னி தபசி, ஆர்த்தி சோனாவானே, சவுரப் ஷின்டே, கணேஷ் கெய்க்வாட், சைதன்யா ஜோஷி, துஷார் ஜாதவ் ஆகியோரும் சென்றுள்ளனர்.
திடீர் என அவர்கள் லோனாவாலா வரை காரில் சென்று வர முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இரண்டு கார்களில் இரவு 2.30 மணிக்கு லோனாவாலாவுக்கு கிளம்பினர். அவர்கள் கட்ரஜ்-தேஹு ரோடு பைபாஸில் செல்கையில் இரண்டு கார்களுக்கும் இடையே போட்டி வைத்து வேகமாக ஓட்டினர். இரு கார்களும் போட்டி போட்டுக் கொண்டு படுவேகமாக சென்றன.
அப்போது தபசி இருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. க்ருதிகா இருந்த காரோ சாலையோரம் இருந்த உணவகம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் க்ருதிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயம் அடைந்த சன்னி, சுமித், ஆர்த்தி, சவுரப், கணேஷ், சைதன்யா, துஷார் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.