உ.பி.யில் பயங்கரம்: ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட பெண் கவலைக்கிடம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவரை மர்ம நபர்கள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 30களில் உள்ள பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணம் செய்துள்ளார். அவரை மர்ம நபர்கள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். ஷாம்லி மாவட்டத்தில் உள்ள டெல்லி-ஷஹரன்பூர் ரயில்பாதையில் அவர் சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார்.
அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்துவிட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே அந்த பெண்ணை ரயில்வே போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஷாம்லி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. இதற்கிடையே அவர் யார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இளம்பெண்கள், சிறுமிகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடுமையும் அங்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.