நாசிக் திரிம்பாகேஸ்வரர் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரி பேரணி!
நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக் திரிம்பாகேஸ்வரர் கோவில் கருவறைக்குள் சென்று வழிபட அனுமதி கோரி இன்று பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது, பெண்களை ஏன் அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதேபோல் மகாராஷ்டிராவின் சிங்னாபூர் சனி பகவான் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில் நாசிக் திரிம்பாகேஸ்வரர் கோவிலிலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பேரணி நடைபெற உள்ளது.
இது குறித்து பெண்கள் அமைப்பின் நிர்வாகி திருப்தி தேசாய் கூறுகையில், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபட உரிமை இருக்கிற போது ஏன் மற்ற கோவில்களில் அனுமதிக்கப்படுவதில்லை? அதுவும் சிவராத்திரி நாளான இன்று பெண்களை கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.
பெண்கள் பேரணியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.