எம்.பில்., பி.ஹெச்டி. படிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி!
டெல்லி: எம்.பில்., பி. ஹெச்டி. படிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்கும் காலத்தை அதிகரித்து பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
எம்.பில்., பி.ஹெச்டி. படிக்கும் பெண்கள் மற்றும் 40 சதவீதத்திற்கும் அதிக அளவில் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களின் படிப்பை முடிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசிக்கு பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையை ஏற்று எம்.பில்., பி.ஹெச்டி. படிக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் படிப்பை முடிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது எம்.பில். படிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆய்வை முடிக்க கூடுதலாக ஒரு ஆண்டும், பி.ஹெச்டி. ஆய்வை முடிக்க கூடுதலாக இரண்டு ஆண்டுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.பில்., பி.ஹெச்டி. படிக்கும் பெண்களுக்கு பேருகால விடுமுறை, குழந்தையை பார்த்துக்கொள்ள 240 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த இரண்டு படிப்பு படிக்கும் பெண்கள் திருமணம் மற்றும் பிற காரணங்களுக்காக வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தால் அவர்கள் தாங்கள் செல்லும் இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடரலாம்.
2009ம் ஆண்டு ஜூலை 11ம் தேதிக்கு முன்பாக எம்.பில்., பி.ஹெச்டி. படிப்பில் சேர்ந்தவர்கள் பேராசிரியர் பணிக்கு சேர்கையில் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் தளர்த்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications