சிக்கன் குழம்பு கேட்ட கணவனை கழுத்தில் வெட்டி கொன்ற மனைவி
பெங்களூர்: கோழி குழம்பு வைக்கச்சொல்லி தகராறு செய்த கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் மாவினகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (40 ). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமா (36). இந்த தம்பதிக்கு 11 வயதில் மகன் உள்ளான்.
இந்நிலையில் மஞ்சுநாத் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாம் குடித்து விட்டு ஊர்சுற்றி திரிந்துள்ளார். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல சம்பவத்தன்று, மூக்கு முட்ட குடித்துவிட்டு கோழிக்கறியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த மஞ்சுநாத், கோழி குழம்பு வைத்து தருமாறு மனைவியை அதட்டியுள்ளார்.
"நீங்க பார்க்குற வேலைக்கு கோழிக்குழம்பு ஒரு கேடா" என்று உமா தனது கணவனை திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த மஞ்சுநாத் மனைவியையும், மகனையும் அடித்து உதைத்துள்ளார். வீட்டில் இருந்த அரிவாளை தூக்கிக்கொண்டு வந்து "கோழிக்குழம்பு வைக்கிறாயா அல்லது ஒரே வெட்டாக வெட்டட்டுமா" என்று அரிவாளை ஓங்கியபடி நின்றுள்ளார்.
கோபத்தின் உச்சிக்கே சென்ற உமா, கணவனை தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி மஞ்சுநாத்தின் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். இதில் தலை துண்டாக அதே இடத்தில் மஞ்சுநாத் பலியானார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உமாவை கைது செய்தனர்.
கோழி குழம்புக்காக நடந்த கொலையை அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிவருகிறார்கள்.