மகா. காவல் நிலையத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி கொடூரமாக நடந்து கொண்ட போலீஸ்
மும்பை: மகாராஷ்டிராவில் காவல் நிலையம் ஒன்றில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அவர்களின் மர்ம உறுப்புகளில் மிளகாய்ப்பொடி தேய்க்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவ்ரங்காபாத்தில் உள்ள கிராந்தி சவுக் காவல் நிலையத்தில் இரண்டு இளம்பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களின் மர்ம உறுப்புகளில் மிளகாய்ப்பொடியை தேய்த்துவிட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான என்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ள 21 வயது பெண் கூறுகையில்,
புத்தாண்டை வரவேற்கும் இரவில் நான் மற்றும் 6 பேர் ஒரு ஹோட்டலுக்கு சென்றோம். காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்ட நானும், என் தோழியும் மது அருந்தவில்லை. மற்றவர்கள் அனைவரும் மது அருந்தினார்கள்.
அதில் ஒரு ஆண் நண்பர் குடிபோதையில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு சுயநினைவை இழந்துவிட்டார். அதன் பிறகு இரவு 1 மணி அளவில் அவரை தியோகிரி காலனியில் இறக்கிவிட்டுவிட்டு நாங்கள் செவன் ஹில்ஸில் உள்ள எங்கள் வீட்டிற்கு சென்றோம். மீதமுள்ள நண்பர்கள் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றபோது அங்கு அந்த குடிபோதையில் சுயநினைவை இழந்த நபர் நின்றுள்ளார்.
அப்போது எங்கள் நண்பர்களில் ஒருவர் அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் கீழே விழுந்து காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கில் போலீசார் என்னையும், என் தோழியையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களின் ஆடைகளை அவிழ்க்க வைத்து நிர்வாணமாக்கி எங்களின் மர்ம உறுப்பில் பெண் போலீசார் மிளகாய்ப் பொடியை தடவினர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர் என்றார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications