ஆவதும் பெண்ணாலே! சத்தீஸ்கரில் பாஜகவுக்கு வெற்றிக்கு அணிலாக மாறி பாலம் அமைத்தவர்கள் யார்?
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற பெண்களின் வாக்குகள் முக்கிய பங்காற்றியதா என்ற கேள்வி எழுகிறது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று தொடங்குகிறது.

மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட இந்த சட்டசபைக்கு 45 அல்லது 46 இடங்களில் வென்றால் அக்கட்சியே ஆட்சி அமைக்க உரிமை கோரும். இந்த மாநிலமானது மத்திய பிரதேசத்திலிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு உருவானது. இதையடுத்து அந்த ஆண்டு முதலில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி முதலில் ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் நிர்வாகியும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவருமான அஜித் ஜோகி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 2003 ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். இதையடுத்து 2003 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது.
பாஜகவை சேர்ந்த ரமான் சிங் முதல்வரானார். இவர் 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்று 3 முறை அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வென்றது. பூபேஷ் பாகல் முதல்வரானார்.
தற்போது நடந்த தேர்தலின் போது காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் பாஜக ஆட்சியை பிடிக்கவும் போராடிய நிலையில் இந்த போராட்டத்தில் பாஜகவே வென்றது. சத்தீஸ்கரில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் நடந்து முடிந்த தேர்தலில் சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்துள்ளது.
என்னதான் தெலுங்கானாவில் காங்கிரஸ் கால் வைத்தாலும் அது முழுக்க முழுக்க கேசிஆர் கட்சியின் மீதான அதிருப்தி வாக்குகள் ஆகும். இந்த தேர்தலில் மேலும் ஒரு சுவாரஸ்யம் நடந்துள்ளது. அதாவது பாஜக வெற்றிக்கு பெண்களின் வாக்குகள் காரணமாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் நடந்து முடிந்த தேர்தலில் 74.04 சதவீதம் பெண்கள் வாக்களித்தனர். ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது 76.03 சதவீதம் ஆகும். அதிலும் பெண்களை கவரும் வகையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஒரு சிலிண்டர் ரூ 500 க்கு விற்பனை செய்யப்படும்
திருமணமான பெண்களுக்கு ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த இரு திட்டங்களும் பெண்களுக்கு கை கொடுக்கும் திட்டங்களாகும். சிலிண்டர் விலை ரூ 1000 இருக்கும் நிலையில் அதில் பாதி விலைக்கு சிலிண்டர் கொடுப்பதாக சொல்லப்படுவது சிறந்த முன்னெடுப்புதானே! அது போல் மாதந்தோறும் ரூ 1000 என்ற திட்டமானது ஏழை எளிய பெண்களுக்கு, பொறுப்பில்லாத கணவன்மார்களை கொண்ட பெண்கள், கணவனை இழந்த பெண்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications