பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு.. சுடிதார் அணிந்து வர கேரள ஐகோர்ட் தடை
பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்லும் பெண்கள் சுடிதார், சல்வார் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வர கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோயிலுக்கு செல்லும் பெண்கள் சுடிதார், சல்வார் போன்ற ஆடைகளை அணியக் கூடாது என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில், சேலை அல்லது கேரள பாரம்பரிய உடையணிந்து வரும் பெண்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் வழக்கம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. சுடிதார், சல்வார் உள்ளிட்ட இதர உடைகளை அணிந்து வரும் பெண்கள், இடுப்பில் வேஷ்டி அணிந்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த நிலையில், சுடிதார், சல்வார் அணிந்து வரும் பெண்கள், கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் செயல் அதிகாரி கே.என். சதீஷ் அறிவித்தார்.
இதனை கண்டித்து, இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
மேலும், கே.என். சதிஷ் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், பத்மநாபசுவாமி கோயிலுக்கு பெண்கள் சுடிதார், சல்வார் போன்ற உடைகளை அணிந்து வரக் கூடாது என்று கேரள ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.