குடிக்க நீர் இல்லை.. ஐபிஎல் போட்டிகள் நடத்த தண்ணீர் தர முடியாது: மகாராஷ்டிர முதல்வர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்குத் தேவையான தண்ணீர் வழங்க முடியாது. மராட்டிய மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தாவிட்டாலும் கவலை இல்லை என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மும்பை உயர்நீதிமன்றமும், தண்ணீர் இல்லாமல் விலங்குகள், கால்நடைகள் இறந்து கொண்டு இருக்கும் நிலையில், மக்கள் தண்ணீர் இல்லாமல் இறந்து கொண்டிருக்கும் நிலையில் ''பிட்ச்''சை மேம்படுத்த தண்ணீர் செலவழிக்க வேண்டுமா? என்று கோபமாக ஹைகோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து மாநில முதல்வர் பட்னாவிஸ் இன்று கூறுகையில், ''எங்கள் நிலையை நீதிமன்றத்தில் தெளிவாக்கி உள்ளோம். மாநிலத்தில் இருந்து ஐபிஎல் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. போதிய தண்ணீர் எங்களால் வழங்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
ஆடுகளத்தை மேம்படுத்த நாங்கள் தண்ணீர் வாங்கிக் கொள்வோம் என்று நீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 20 போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் இருக்கும் நிலையில், மைதானத்தை மேம்படுத்த அதிக லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டிவரும் என்பதுதான் எதிர்ப்புக்கு காரணம்.












Click it and Unblock the Notifications