இந்திய வரலாற்றில் அதிக நாட்கள் முடங்கிய 15–வது நாடாளுமன்றம்
டெல்லி: நாட்டின் 15வது நாடாளுமன்ற லோக்சபா நிறைவடைந்துள்ளது. அதுவும் நாட்டின் வரலாற்றிலேயே அதிக நாட்கள் முடங்கிய நாடாளுமன்றம் என்ற பெயருடன் முடிவடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்சினையில், லோக்சபா ஓரிரண்டு நாட்கள் முடங்குவது இயல்பு. ஆனால் 15-வது நாடாளுமன்றத்தில் அப்படியெல்லாம் இல்லை.
ஒவ்வொரு பிரச்சனைக்காகவும் ஒட்டுமொத்த கூட்டத் தொடரே வாரக் கணக்கில் முடங்குவதுதான் வழக்கமாக இருந்தது.

ஸ்பெக்ட்ரம்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு ஒட்டுமொத்த கூட்டத்தொடரும் முடங்கியது.

நிலக்கரி ஊழல்
இதேபோன்று நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் கூட்டத்தொடர் முழுமையாக முடங்கிப்போய் விட்டது. இந்த முடக்கங்கள், நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறை.

தெலுங்கானா
கடைசித்தொடரில் தெலுங்கானா தனி மாநில உருவாக்க பிரச்சினையில் இதுவரை இல்லாத கலகங்களை நாடாளுமன்றம் கண்டது. உறுப்பினர்கள்மீது மிளகுப்பொடி வீச்சு, அவை செயலாளரின் மைக் உடைப்பு என அரங்கேறிய காட்சிகள் நாடாளுமன்ற வரலாற்றிலேயே கறுப்பு அத்தியாயமாக அமைந்தது.

16 எம்.பிக்கள் நீக்கம்
அதேபோல் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றுவதற்கு முன்பாக 16 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அமளியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்களே
மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ஏற்பட்ட அமளியால் அவர் பட்ஜெட் உரையை வாசிக்க முடியாத அளவுக்கு சபையில் அமளி நிலவியது. ஆந்திராவைச் சேர்ந்த 4 மத்திய அமைச்சர்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்ட நிகழ்வும் அரங்கேறியது.

பதவி பறிப்பு
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி. பதவி, உச்சநீதிமன்ற தீர்ப்பால் பறிக்கப்பட்டதும் இந்த 15வது நாடாளுமன்றத்தில்தான் என்பது வரலாறு.

24%தான்
முடிவடைந்த 15வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரில் இரு சபைகளுமே ஒதுக்கப்பட்ட நேரத்தில் மொத்தம் 24% நேரம் மட்டுமே இயங்கி இருக்கிறதாம்..












Click it and Unblock the Notifications