ரயில் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி பிரதமரிடம் வலியுறுத்துவோம்: உத்தவ் தாக்கரே
மும்பை: ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. மேலும், இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி முதல் அமலாகும் என ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா அறிவித்தார்.

சாதாரண மக்களைப் இந்த கட்டண உயர்வு பாதிக்கும் எனக் கூறி, இந்த திடீர் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும், நாடு முழுவதிலும் கடும் போராட்டம் நடத்தப்படுகிறது. தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே கூறியதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது :-
‘ரயில் கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு நான் பிரதமரை தொடர்பு கொண்டு வலியுறுத்துவேன். மேலும், இது போன்ற கட்டண உயர்வை ஏழை மக்களால் தாங்க முடியாது. கட்டண உயர்வை திரும்ப பெறுவது சாத்தியம் இல்லையெனில் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications