1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கில் போடப்படும் முதல் குற்றவாளி யாகூப் மேமன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கி்ல் தூக்கில் போடப்படும் முதல் குற்றவாளி என்ற பெயர் யாகூப் மேமனுக்குக் கிடைத்துள்ளது.

யாகூப் மேமனின் அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், ஜூலை 30ம் தேதி மேமன் தூக்கிலிடப்படவுள்ளார்.
- 53 வயதாகும் மேன் சாட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆவார். ஆனால் தனது பாதை மாறியதால் இன்று தூக்குக் கயிறின் கீழ் வந்து நிற்கிறார்.
- 1993ல் மும்பையில் 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 256 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்த வழக்கில் 2007ம் ஆண்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார் மேமன்.
- 1994ம் ஆண்டு நேபாள நாட்டு எல்லையில் வைத்துக் கைது செய்யப்பட்ட யாகூப் மேமன் அன்று முதல் சிறையில் இருந்து வருகிறார்.
- சிறையில் இருந்த காலத்தில் இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்து 2 மாஸ்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் மேமன்.
- ஆங்கில இலக்கியத்திலும், அரசியல் அறிவியலிலும் இந்தப் பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
- இந்த வழக்கில் மொத்தம் 11 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
- மேமன் தவிர மற்ற 10 பேருக்கும் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு விட்டது.
- டைகர் மேமன் என அழைக்கப்படும் இப்ராகிம் மேமனின் சகோதரர்தான் யாகூப் மேமன்.
- இப்ராகிம் மேமன் 1993ம் ஆண்டே இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார். இதுவரை அவர் சிக்கவில்லை.
- 1993 வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர் தாவூத் இப்ராகிம், அவரது தம்பி அனீஸ் இப்ராகிம். இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
- பாகிஸ்தானில் தாவூத் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் உள்ளன.
- 1993ம் ஆண்டு துபாயில் வைத்து மேமன் சகோதரர்களுடனும், மற்றவர்களுடனும், குண்டுவெடிப்பு தொடர்பான திட்டத்தை தாவூத் தீட்டினார் என்பது குற்றச்சாட்டாகும்.
- மேமன் மீது, சதித் திட்டம் தீட்டி செயல்படுத்தியது, ஆயுதங்களை, வெடிபொருட்களை பெற்று விநியோகித்தது, நிதியுதவி செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
- கடந்த வருடம் யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications