நள்ளிரவில் யாகூப் மேமனுக்கு 'பர்த்டே கேக்' அனுப்பிய குடும்பத்தார்
நாக்பூர்: யாகூப் மேமனின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு அவருக்கு அவரது குடும்பத்தினர் கேக் ஒன்றை நாக்பூர் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் மத்திய சிறையில் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக காலை 7 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
யாகூபின் 53வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி நள்ளிரவு அவருக்கு கேக் ஒன்றை அவரது குடும்பத்தார்கள் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் கேக்கை சிறை கண்காணிப்பாளரிடம் அளித்து மேமனிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
யாகூப் மேமனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மேமனின் உடலை விமானம் மூலம் நாக்பூரில் இருந்து மும்பைக்கு கொண்டு சென்றனர். மேமனின் உடல் மும்பை மாஹிம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையொட்டி மாஹிம் பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.