தூக்கைத் தடுக்க இறுதி கட்ட முயற்சி..மகாராஷ்ட்ர ஆளுநரிடம் யாகூப் மேமன் மீண்டும் கருணை மனு
மும்பை: மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனையை தவிர்க்க இறுதி கட்ட முயற்சியாக மகாராஷ்ட்ர மாநிலஆளுநரிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் 30 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் இருவரும் பாகிஸ்தானில் பதுங்கியதால் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் உள்பட 12 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. யாகூப் மேமனின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து, தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிரான மனுவை கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், தண்டனையைக் குறைக்க கோரி யாகூப் மேமன் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் யாகூப் மேமன் தூக்கு உறுதி செய்யப்பட்டது.
யாகூப் மேமன் தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிரா மாநில ஆளுநரிடம் யாகூப் மேமன், கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.