வீட்டுக்கே வந்து காய்கறியோடு ரூ. 2,000 கரன்சியும் சப்ளை செய்யும் நிறுவனம்
பெங்களூர்: ஆன்லைனில் அத்தியாவசிய பொருட்களை ஆர்டர் செய்தால் தலா ரூ.2000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஒன்று, யெஸ் வங்கியுடன் இணைந்து செயல்படுத்துகிறது.
Grofers என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் காய்கறியிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்து வகை பொருட்களும் கிடைக்கின்றன. இந்த நிறுவனத்திடம் ஆன்லைன் மூலம் ரூ.2000 மற்றும் அதற்கு மேல் ஷாப்பிங் செய்தால், வீட்டுக்கு பொருளை கொண்டுவரும் ஊழியரிடம் நமது டெபிட் கார்டை கொடுத்து 2000 ரொக்கம் பெற முடியும்.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போதே இதற்கான ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். யெஸ் பேங்க் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை Grofers நிறுவனம் இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இதனால் ஏடிஎம்களில் காத்துக் கிடக்காமல் வீட்டுக்குள் இருந்தபடி பணம் பெறலாம்.
முதல்கட்டமாக இந்த திட்டம், பெங்களூர், மும்பை மற்றும் டெல்லியடுத்த குர்கான் நகரங்களில் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. படிப்படியாக பிற பெரிய நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என்று இவ்விரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.