யோகா செய்யச் சொன்னா குறட்டை விட்டு தூங்கிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
கொச்சி: கேரளாவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே அமைச்சர் தூங்கிய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, டெல்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் யோகா பயிற்சியை பலர் விரும்பி செய்தனர். டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
மத்திய அமைச்சர்கள் பல மாநிலங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கேரளாவில் உள்ள கொச்சி ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில், யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ஹைபி ஈடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
சுரேஷ்பிரபு சவாசனம்
யோகா பயிற்சியின் போது கடைசியில் சவாசனம் செய்தனர். பயிற்சி முடிந்து அனைவரும் எழுந்த போது, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவருடன் பயிற்சியில் ஈடுபட்டவர்கள், அவரது அருகில் சென்று மெல்ல பார்த்த போது, அவர் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
|
அட எழுப்புங்கப்பா
அவரை எப்படி எழுப்புவது என்று யோசித்த உதவியாளர்கள், உடனே தட்டி எழுப்பவும் முடியாமலும், இதை இப்படியே விட்டுவிடவும் முடியாமலும் சிறிது நேரம் தவித்தனர். பின்பு ஒரு வழியாக, அவரை எழுப்பிவிட்டனர். திடுக்கிட்டு எழுந்த சுரேஷ் பிரபு ஒரு வழியாக சமாளித்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
|
டுவிட்டரில் பரபரப்பு
யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஒருவரே தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. புகைப்படங்களை பகிர்ந்த டுவிட்டர்கள் அது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ஆசனம் செய்யச்சொன்னால் அசந்து தூங்கிட்டாரே அமைச்சர் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
|
விஜயகாந்திடம் கற்றுக்கொள்ளட்டும்
யோகாவின் போது தூங்கும் அழகு அமைச்சர் சுரேஷ் பிரபு யோகா செய்வது பற்றி விஜயகாந்திடம் கற்றுக்கொள்ளலாமே என்றும் பதிவிட்டுள்ளனர்.