நான் பாதுகாப்பாகவும், உடல் நலத்துடனும் உள்ளேன்.. வதந்தியை நம்பாதீர்கள்.. பாபா ராம்தேவ் வேண்டுகோள்!
தான் இறந்துவிட்டதாக பரவி வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என யோகா குரு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் இறந்துவிட்டதாக பரவி வரும் வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள பாபா ராம்தேவ் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
யோகா குரு பாபா ராம்தேவ் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் யோகா பயிற்சி முகாம்களை நடத்திவருகிறார். இதனால் உலகம் முழுக்க பிரபலமானவர்.
ஆன்மீகம் மட்டுமின்றி பல்வேறு வகையான இயற்கையான மூலிகை தயாரிப்புகளை விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்தையும் பாபா ராம்தேவ் நடத்தி வருகிறார். மேலும் பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருபவர்.
இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது.
Took yog shivir of thousands of yogis in Haridwar today. I am safe and healthy. Don't believe on any rumours pic.twitter.com/6P2KlUXw8l
— Swami Ramdev (@yogrishiramdev) April 25, 2017
இந்த தகவலால் பலர் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் நான் பாதுகாப்பாகவும், உடல் நலத்துடனும் உள்ளேன். எந்த ஒரு வதந்தியையும் நம்பாதீர்கள், இன்று கூட ஹரித்துவாரில் ஆயிரக்கணக்கானோருக்கு யோகா வகுப்பு எடுத்ததாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தல் தெரிவித்துள்ளார்.