இந்தியா பற்றி விமர்சனம் செய்யும் ஒபாமாவுக்கு அமெரிக்க இனவெறி பற்றி தெரியாதா? ஆதித்யநாத் சாடல்
வாரணாசி: இந்தியாவின் மத சார்பின்மை குறித்து பேசும் முன்பாக அமெரிக்காவின் இனவெறி பிரச்சினையை பராக் ஒபாமா தீர்த்துக்கொள்ளட்டும் என்று பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் கூறினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு, வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது: இந்தியாவில் அனைத்து மதங்களும் பூத்து குலுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு நாட்டை குறை சொல்லும் ஒபாமா, முதலில் தனது நாட்டில் நடைபெற்றுவரும் இனவெறி தாக்குதல் பிரச்சினையை தடுத்து நிறுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாகவே, அமெரிக்காவின் சாலைகளில், மோசமான இனவெறி தாக்குதல் நடந்து வருகிறது. இந்தியாவில், இந்துக்களை போலவே, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்களது மத வழிபாட்டை தடையின்றி நடத்திக் கொள்கின்றனர்.
அப்பாவி பழங்குடியினர், தலித்துகளை, சேவை என்ற பெயரில், கிறிஸ்தவ மிஷினரிகள் மதமாற்றம் செய்துவருகின்றன. அப்போது வாய்மூடி ஒத்துழைத்த, மதசார்பற்ற சக்திகள், இந்துக்கள் மதமாற்றத்தில் ஈடுபட தொடங்கியதுமே அலறுவது ஏன்?
நமது நாட்டில் ராமராஜ்யம் வேண்டும் என்றால், இந்துக்கள் ஒருபோதும் ஜாதி அடிப்படையில் பிளவுபட்டுவிடக் கூடாது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவது நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், "காந்தி இப்போது இருந்தால், இந்தியாவின் மதசார்பின்மையை பார்த்து ஷாக் ஆகியிருப்பார்" என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications