நோ வைலன்ஸ்.. ஒன்லி சைலன்ட்.. உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாப்பதில் உத்தரப் பிரதேசம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதி நிலவுகிறது எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதுதான் பாஜகவின் இலக்கு என்று கூறியுள்ள யோகி ஆதித்யநாத் அதற்கு இடையூறாக உள்ளவற்தை தகர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சுட்டிக்காட்டிய யோகி ஆதித்யநாத், "இந்த மாநாடு நடத்தியதற்கு காரணம் முதலீடுகள் அதிக அளவில் குவிய வேண்டும் என்பதற்காகதான். இதற்கு முன்னர் நடந்த மாநாடுகள் குறித்து நமக்கு நன்றாக தெரியும்.

அந்த மாநாடுகள் உத்தரப் பிரதேசத்தை பற்றியதாக இருந்தாலும் அவை உத்தரப் பிரதேசத்திற்கு வெளியில்தான் நடைபெற்றன. ஆனால் முதல் முறையாக பாஜக அரசு இந்த மாநாட்டை உத்தரப் பிரதேசத்தில் நடத்தி காட்டியிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி வரை முதலீடுகள் வர இருக்கின்றன. இவ்வளவு முதலீட்டில் தொடங்கப்பட உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தற்போது பாஜக அரசு இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தி வருகிறது. இதற்காக மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், தொலை தொடர்பு என 10 முக்கிய துறைகள் தலைகீழ் மாற்றம் பெற இருக்கிறது. தொடக்க கல்விக்காக கல்விக்காக மட்டும் ரூ.1,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கு தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். அதேபோல நான் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுவரை இம்மாநிலத்தில் ஒரேயொரு கலவரம் கூட நடக்கவில்லை. அதேபால குற்றங்கள்/குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இங்கு மாஃபியாக்களின் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஆனால் பாஜக பொறுப்பேற்ற பின்னர் அவை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்தான் இதற்கு காரணம். யதார்த்தம் இவ்வாறு இருக்கையில் இதனை புரிந்துக்கொள்ளாத எதிர்க்கட்சியின் எங்கள் மீது சரமாரியான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். தற்போது மாநிலத்தில் முதலீடுகள் வந்திருக்கின்றன. இந்த முதலீடுகளின் அடிப்படையில் தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதற்கு இடையூறாக யார் வந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications