ராஜாவின் ராகம்.. சொக்க வைக்கும் குரலில்.. கண் மூடி தூங்கும் யானை.. இது குஞ்சனின் கதை!
யானையை இளைஞர் ஒருவர் தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்.
கேரளா: "பாடினாதான் தூங்கறான்... இல்லாட்டி இவன் தூங்கவே மாட்டேன்" என்கிறார் ஸ்ரீகுமார். இப்படி தாலாட்டு பாட சொல்லி பிடிவாதம் பிடிப்பது யார் தெரியுமா? சாரி... எது தெரியுமா.. ஒரு யானைதான்!!
பொதுவாக யானைகளிடம் பாகன்கள் முரட்டுதனமாகவே நடந்து கொள்வார்கள். காரணம் அப்போதுதான் கட்டுப்பட்டு இருக்கும் என்பதற்காகத்தான் சத்தமாக பேசிக் கொண்டும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டும் இருப்பார்கள்.
பராமரிப்பு வேலை
ஆனால் ஸ்ரீகுமார் மட்டும் யானைகளிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறார். திருச்சூர் பகுதியை சோ்ந்தவா் ஸ்ரீ குமார். இவரது தொழிலே யானைகளை பராமரிப்பதுதான். அதுவும் தனக்கு சொந்தமான வினய் சுந்தர் என்றால் கொள்ளை பிரியம். சுந்தருக்கு குஞ்சன் என்ற செல்ல பெயர் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
இளையராஜா பாட்டு
இந்த சுந்தருக்கு தினமும் தாலாட்டு பாடினாதான் தூக்கம் வருமாம். அதனால் நாளெல்லாம் வேலை செய்துவிட்டு டயர்டாக வரும் சுந்தருக்கு, தினமும் ராத்திரியில் ஸ்ரீகுமார் தாலாட்டு பாட ஆரம்பிக்கிறார். பெரும்பாலும் இளையராஜா பாட்டுதான். ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, கண்ணே கலைமானே போன்ற தாலாட்டு பாடல்களை மலையாளத்தில் பாடுகிறார் ஸ்ரீகுமார்.
|
சூப்பர் சிங்கர்
சுந்தருக்கு தாலாட்டு பாடும் காட்சி இணையத்தில் வைரலாக வருவதுடன், எல்லோரும் ஷேர் செய்தும் வருகிறார்கள். எல்லாவற்றையும் விட ஹைலைட் ஸ்ரீகுமார் சூப்பராக பாடுகிறார். இவர் ஒரு ஸ்டேஜ் சிங்கராம். உள்ளூர் டிவி ஷோக்களில் நிறைய பாடி கைதட்டல்களை பெற்றுள்ளார்.
குஞ்சன் என் குழந்தை
இது பற்றி ஸ்ரீகுமார் சொல்லும்போது, "நான் பேசுவதும், பாடுவதும் என் குஞ்சனுக்கு புரிகிறதா என தெரியவில்லை. ஆனால் எங்களுக்குள்ள ஒரு பிணைப்பு உள்ளது. அதை எனக்கு வெளிப்படுத்தவும் விவரிக்கவும் தெரியல. ஆனா இந்த குஞ்சன் எனக்கு குழந்தை போல" என்கிறார்.
ஏதாவது புரியுதா?
அல்லி இளம் பூவோ... இல்லிமுலம் தேனோ
தெங்கிள நீரோ.. தேன்மொழியோ..
மண்ணில் விரிஞ்ச நிலவோ
ஏதாவது புரியுதா.. குஞ்சனுக்குப் புரியும் போல.. கண் மூடி பாட்டுக் கேட்கும் அந்த யானையை பாருங்க!. சரி, இதில் போய் நம்ம ராஜாவின் ராக தாலாட்டை ஒரிஜினலாகவும் கேட்டுப் பாருங்க!!