ஆம்புலன்ஸ் தர மறுப்பு.. இறந்த தந்தையின் உடலை கை வண்டியில் எடுத்து சென்றார் மகன்
பிலிப்பித்: உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த தந்தையை, இளைஞர் ஒருவர் கை வண்டியில் எடுத்துச் சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் நகர் மதினாஷா பகுதியைச் சேர்ந்த தொழிலாளி துளசிராம் (70). அவருக்கு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகன் சுராஜ் தனது தந்தையை துளசிராமை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அழைத்துச் சென்றார்.

நீண்ட காத்திருப்புக்குப்பின் அவர் 9.40 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் காலை 11 மணியளவில் துளசிராம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தந்தையின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டார் சுராஜ். எந்த வாகனமும் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். பலமுறை சுராஜ் கேட்டும் மருத்துவமனை சார்பில் ஆம்புலன் தர மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி கைவண்டியில் தந்தையின் உடலை வைத்துச் இழுத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சி நேற்று டி.வி மற்றும் சமூக வலை தளங்களில் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த மனைவியின் உடலை கணவர் ஒருவர் தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் ஒடிசாவில் சமீபத்தில் நடந்தது. இந்த வீடியோ காட்சி டிவி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications