எலே பேதில போவான்.. ’வில்லன்’ அஜித்தையே மிஞ்சிட்டியேல! ஓசி பயணத்துக்கு இப்படியா? வீடியோவை பாருங்க!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாற்று திறனாளிகள் பயண சலுகையை பெறுவதற்காக இளைஞர் ஒருவர் மாற்றுத்திறனாளி போல நடித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ரயிலில் இறங்கி ஒரு சில அடிகள் மாற்றுத்திறனாளி போல் நடந்த அவர், அதற்குப் பிறகு சாதாரணமாக நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய அரசுத் துறைகளில் ஒன்று ரயில்வே. உள்ளூர் பயணத்திற்கும் நீண்ட தூர பயணத்திற்கும் ரயில் சேவையை தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். இந்தியாவின் மூலை முடுக்கிலுள்ள பகுதிகள் அனைத்தையும் ரயில்வே துறை தான் இணைக்கிறது.
உள்ளூர் மின்சார ரயில்கள், இன்டர்சிட்டி ரயில்கள், பேசஞ்சர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், தொடங்கி தற்போது வந்தே பாரத் ரயில்கள் வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கிறது. அதே நேரத்தில் கடந்த சில தினங்களாகவே ரயில் பயணம் சிரமம் மிகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ரயில்களில் பயணிப்பதால் பயணிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைக்கப்படுவது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் அதிகரிக்கப்படுவது ஆகியவற்றின் காரணமாக மக்கள் கடும் இன்னலை சந்திக்கின்றனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல போதிய ரயில்கள் இயக்கப்படாததால் முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகள், ஏசி கோச்சுகளில் கூட முன்பதிவு இல்லா பயணிகள் ஆக்கிரமிப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
மேலும் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் கூட பிற பயணிகள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் ரயில்களை கூடுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இயக்க வேண்டும் கூடுதலாக ரயில்களையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது என்னவோ பெண்களும் மாற்றுத்திறனாளிகளும் தான்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயணத்தில் 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி போல நடித்த இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் தான் தற்போது நெட்டிசன்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
மேற்குவங்கம் : இலவச ரயில் பயணத்துக்காக, மாற்றுத்திறனாளி போல நடித்த நபர்.
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) June 18, 2025
ரயிலிலிருந்து இறங்கியதும் காத்திருந்த அதிர்ச்சி! pic.twitter.com/45E4GvW8zX
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்த அந்த இளைஞர் தான் ஒரு மாற்றுத்திறனாளி எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து சக பயணிகள் அவரை பயணம் செய்ய அனுமதித்திருக்கின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையம் வரை மாற்றுத்திறனாளி போல நடந்து கொண்ட அவர் ரயிலில் இருந்து இறங்கி ஒரு சில அடிகள் மாற்றுத்திறனாளி போலவே நடந்து சென்றார். இந்த நிலையில் திடீரென நிமிர்ந்து எழுந்து சாதாரண நபர் போல நடந்து செல்ல தொடங்கினார்.
அதற்குப் பிறகுதான் அவர் மாற்றுத்திறனாளி போல நடித்தது தெரியவந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளி போல நடித்த அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. மேலும் ரயில்களில் பரிசோதகர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதிக்கும் போது மருத்துவ சான்றிதழையும் கேட்டு பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications