ஜெகன் மோகன் Vs ஷர்மிளா சொத்து தகராறு.. 'அத்தனையும் கூட்டு குடும்ப சொத்துதான்'... 'அம்மா' அப்பீல்!
அமராவதி: ஆந்திராவில் அரசியல் புயல் ஓய்ந்துவிட்ட நிலையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது சகோதரி ஷர்மிளா இடையேயான சொத்து தகராறுதான் பேசுபொருளாக இருக்கிறது. இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா ஆகியோர் உரிமை கோருகிற சொத்துகள் அனைத்தும் கூட்டு குடும்ப சொத்துகளே என்று அவர்களின் தாயார் விஜயாம்மா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் காங்கிரஸ் முகமாக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. ஆந்திரா முதல்வராக பதவி வகித்த போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவரது மறைவுக்குப் பின்னர் மகன் ஜெகன் மோகன் ரெட்டி அரசியலுக்கு வந்தார்.

ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியை டெல்லி காங்கிரஸ் மேலிடம் புறக்கணித்ததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எனும் தனிக் கட்சியைத் தொடங்கினார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திராவில் ஆட்சியையையும் ஜெகன் மோகன் ரெட்டி கைப்பற்றினார். அண்மையில் நடைபெற்ற லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது.
ஒய்.எஸ்.ராஜசேகரின் மகளான ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளாவும் அரசியலில் குதித்தார். தெலுங்கானாவில் தனி அரசியல் கட்சியை நடத்திய நிலையில் காங்கிரஸில் இணைந்தார். ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்ட ஷர்மிளா, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அரசியலில் ஜெகன் மோகன் ரெட்டியும் சகோதரி ஷர்மிளாவும் எதிரும் புதிருமாக களமாடினர். இந்த நிலையில்தான் ஜெகன் மோகனும் ஷர்மிளாவும் சொத்துக்காக பகிரங்கமாக சண்டை போட்டு வருகின்றனர். குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனப் பங்குகளை தங்கள் வசமாக்கி வருவதாக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக தீர்ப்பாயத்திலும் ஜெகன் மோகன் ரெட்டி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெகனும் ஷர்மிளாவும் சொத்துக்காக அடித்துக் கொள்ளும் விவகாரத்தால் ஆந்திரா அரசியலில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கட்சிகள் உற்சாகமடைந்துள்ளன. இதனையடுத்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெகன், ஷர்மிளாவின் தாயார் விஜயாம்மா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது கணவர் ஒய்.எஸ்.ராஜசேகரின் சொத்துகள் அனைத்தும் யாருக்கும் என பிரித்து தரப்படவில்லை; எங்களது குடும்பத்தின் பொது சொத்தாகவே இருக்கிறது. இருவருமே பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ள வேண்டும். ஜெகனை சுற்றி இருப்பவர்களுக்கு அனைத்தும் தெரிந்தும் சொத்து விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிவிடுகின்றனர் எனவும் குற்றம் சாட்டி உள்ளார் விஜயாம்மா.












Click it and Unblock the Notifications