ஏர் இந்தியா மேனேஜருக்கு பளார்: ஜெகன் கட்சி எம்.பி. மிதுன் ரெட்டி சென்னை ஏர்போர்ட்டில் கைது
சென்னை: கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை சேர்ந்த மிதுன் ரெட்டி. அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி விமானம் புறப்பட 20 நிமிடங்கள் இருக்கையில் தனது உறவினர்களுடன் திருப்பதியில் உள்ள விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
பயணிகள் அனைவரும் விமானம் புறப்பட 45 நிமிடங்களுக்கு முன்பே விமான நிலையத்திற்கு வர வேண்டும். ஆனால் மிதுன் காலதாமதாக வந்ததால் ஏர் இந்தியா மேனேஜர் அவருக்கு போர்டிங் பாஸ் வழங்க மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மிதுன் மேனேஜருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இது குறித்து போலீசார் மிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் மிதுன் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மிதுன் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.