ஜப்பானில்.. ராவோடு ராவாக கடலுக்கு அடியிலிருந்து 50 அடி மேலே வந்த 1,000 அடி நிலம்!
டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஹொக்காய்டோ தீவில் திடீர் என்று 1,000 அடி நிலம் கடலில் இருந்து 50 அடி உயரத்திற்கு மேலே வந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹொக்காய்டோ தீவில் 1,000 அடி நிலம் ஒரே நாள் இரவில் கடலில் இருந்து 50 அடி உயரத்திற்கு மேலே வந்துள்ளது. முன்னதாக கடலின் தரை மட்டமாக இருந்த அந்த 1,000 அடி நிலம் தற்போது கடலுக்கு மேலே உயர்ந்து நிற்பது அப்பகுதி மக்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.
ஹொக்காய்டோ தீவுக்கு அருகே பனி மலைகள் உருகி அதிக அளவிலான நீர்ப்பெருக்கு ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக கடலுக்கு கீழே உள்ள நிலப்பகுதியை மேலே கொண்டு வந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
1,000 அடி நீளமும், 100 அடி அகலமும் உள்ள அந்த புதிய நிலத்தை மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
இது குறித்து உள்ளூர்வாசியான கட்டுஷுஹிரோ தனாகா கூறுகையில்,
கடலுக்கு அடியில் இருந்து நிலம் மேலே வந்துள்ளது அதிசயமாக உள்ளது. நிலம் மேலே வந்தபோது எந்தவித சப்தமும் கேட்கவில்லை, அதிர்வும் ஏற்படவில்லை என்றார்.
இந்த சம்பவத்திற்கும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நம்பப்படுகிறது.