ஒரு நொடி தான்..நடுவானில் சிதறிய ஹெலிகாப்டர்கள்! உறைந்து போன மக்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
பெரக்: மலேசியாவில் கடற்படை தினத்தை ஒட்டி சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இரு கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் உண்டு மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் மலேசியா கடற்படை தினமானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ ஹெலிகாப்டர்களும் போர் விமானங்களும் சாகசத்தில் ஈடுபட உள்ளன.

இந்த நிலையில் அந்த ராணுவ தளத்தில் லைவாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வானில் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
புகையை கக்கியபடி இரு ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் இரு ஹெலிகாப்டர்களிலும் பயணம் செய்த கடற்படை வீரர்கள் ஊழியர்கள் விமானிகள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்திய நேரப்படி இன்று காலை 9:30 மணியளவில் ஆர் எம் என் லுமுட் தளத்தில் நடந்த 90 வது கடற்படை நாள் அனுபவிப்பின் போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. ஒத்திகையின் போது RMN கடல்சார் ஆபரேஷன் ஹெலிகாப்டர் (HOM-AW139) மற்றும் RMN FENNEC ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ராயல் மலேசியன் நேவி (RMN) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஒத்திகையின் போது இரு ஹெலிகாப்டர்களிலும் மொத்தம் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். அதாவது 7 TLDM HOM குழுவினர் மற்றும் 3 TLDM Fennec குழுவினர் ஆவர். விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு, உடல்களை அடையாளம் காணுவதற்காக Lumut TLDM இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு முன்னதாக ஹெலிகாப்டர் ஒன்று மற்றொரு ஹெலிகாப்டரின் ரோட்டரை வெட்டி தள்ளியது. இதில் ஒரு ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விமான ஓடு பாதையில் விழுந்து நொறுங்கியது மற்றொன்று அருகில் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்து நொறுங்கியது.
இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்பு வீரர்களும் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று அதில் பயணம் செய்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதில் பயணித்த 10 பேருமே பரிதாபமாக உயிர் இழந்தனர் சம்பவத்தை குறித்து விசாரணை நடத்த மலேசிய அரசு உத்தரவிட்டு உள்ள நிலையில் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications