சோமாலியா: புயல் தாக்கியதில் 100 பேர் பலி- தொடரும் கனமழை
மொகாடிசு: சோமாலியாவை நேற்று தாக்கிய புயலில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகிறது.
இந்திய பெருங்கடலில் உருவான புயல் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் புந்த் லேண்ட் பகுதியில் நேற்று கரையை கடந்தது. புயல் எதிரொலியாக கடும் சூறாவளியும், கனமழையும் அதனைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் உண்டானது.
சூறைக்காற்றைல் சிக்கி மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், தொலை தொடர்புகள் சாதனங்கள் துண்டிக்கப்பட்டதால் டெலிபோன் மற்றும் செல்போன்கள் செயல் இழந்தன. இதனால், மின்சாரம் இல்லாமல் புந்த் லேண்ட் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மக்களைக் காணவில்லை என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கன மழையால் ஏற்கனவே, சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில், மழை நாளை வரை நீடிக்கும் என அந்நாட்டு வானிலைமையம் எச்சரித்துள்ளது. எனவே மேலும் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் அங்கு நிலவுகிறது.
மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அந்நாட்டு அரசு, புனரமைப்பு பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் உதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications