இரும்புத்திரை தேசம்... உலகை அதிர வைத்த சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு கொண்டாட்டங்கள்!
பெய்ஜிங்: சீனா கம்யூனிஸ்ட் கட்சி இன்று (ஜூலை 1) தமது 100-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதனையொட்டி சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
Recommended Video
சீனா கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர் மாவோ எனப்படும் மா சேதுங். 1934-ல் மாவோ நடத்திய நீண்ட பயணம் என்ற மக்கள் இயக்கமானது கம்யூனிஸ்ட் கட்சியை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. மொத்தம் 10,000 கிலோ மீட்டர் நடைபயணம்.
மாவோவின் மக்கள் ராணுவம் நடத்திய இந்த நீண்ட பயணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த நெடும்பயணத்தில் பல்லாயிரக்கணக்கானோ மாண்டு போன நிலையில் யானான் நக்ரை சென்றடைந்தபோது 7,000 பேர்தான் எஞ்சியிருந்தனர். இந்த நெடும்பயணம் தான் சீன மக்களிடத்தில் மாவோ எனும் மகத்தான தலைவரை நெஞ்சில் ஆழப் பதியவைத்தது. இந்த பயணத்தின் முடிவில் பெரும்பாலான இடங்கள் மக்கள் ராணுவம் வசமானது.

ஒரிஜனல் புரட்சித் தலைவர்
2வது உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைந்து சீனாவில் இருந்து வெளியேறியதால் அந்த நாட்டில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தின் முடிவில் 1949-ல் சீனாவில் மக்கள் குடியரசை மலரச் செய்தார் மாவோ எனும் மகத்தான ஒரிஜனல் புரட்சித் தலைவர். 1976-ம் ஆண்டு வரை மாவோ, சீனாவை கட்டி எழுப்ப எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தினார். இவற்றில் பொருளாதார, கலாச்சார முழக்கங்களும் செயல்திட்டங்களும் தோல்வியைத் தழுவிய போதும் மக்கள் தலைவர் என்கிற சிம்மாசனம் மாவோவுக்காகனதாக மட்டுமே இருந்தது.

தியான்மென சதுக்க படுகொலை
மாவோவின் மறைவுக்குப் பின்னர் அன்னிய முதலீடுகளுக்கான வாசல்களை திறந்துவிட்டது சீனா. இன்று உலகின் மிகப் பெரும் வல்லரசாக நிலை கொண்டு நிற்கிறது. சீனாவின் வரலாற்றில் மறக்க முடியாத மனிதகுலப் படுகொலையான, 1989-ல் ஜனநாயகத்துக்காக போராடிய ஆயிரமாயிரம் மாணவர்களை தியான்மென் சதுக்கத்தில் சுட்டு சமாதியாக்கிய கொடூரம்தான்.

நூறு பூக்கள் மலரட்டும்
சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மாவோவும் முன்வைத்த முழக்கங்களில் இன்றளவும் புகழ்பெற்றது நூறு பூக்கள் மலரட்டும்; நூறு சித்தாந்தங்கள் போட்டியிடட்டும் என்கிற ஜனநாயகத்தன்மைதான்.. ஆனால் நடைமுறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலாகட்டும் சீனாவின் அரசாங்கத்திலாகட்டும் இந்த ஜனநாயக உரிமை காப்பாற்றப்பட்டதா? என்பதற்கு வரலாற்றின் பக்கங்களில் பதிலாக நிற்பதுதான் 1989 தியான்மென் படுகொலைகள்.

டபிள்யூ.டி.ஓ.வில் சீனா
2001-ம் ஆண்டு உலக வர்த்த அமைப்பில் சீனாவும் இணைந்து கொண்டது. ஏறத்தாழ 15 ஆண்டுகால இடைவிடாத தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்தான் உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்தது. 2008-ம் ஆண்டு உலகமே வியந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சீனா நடத்தி காட்டியது. ஆனால் சீனாவில் இந்த போட்டிகள் நடக்கின்றன என்பதற்காகவே புறக்கணிப்பு முழக்கங்கள் எழாமல் இல்லை. சீனாவின் திபெத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் தொடருகின்றன.

சீனாவின் பேராதிக்க மனோநிலை
இந்த 100 ஆண்டுகாலத்தில் சீனாவை ஆள்கிற ஒரே இயக்கமாக கட்சியாக சீனா கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது. ஆனால் சீனா இன்னமும் இரும்புத்திரையால் மூடிக் கொண்ட, நாடுபிடி வேட்கை கொண்ட தேசமாக இருக்கிறது. அதனால்தான் உலக நாடுகளின் ஒவ்வொரு பகுதியிலும் சீனா மீதான கோபமும் கொந்தளிப்பும் பெருங்கடல்கள் போல் பரந்து விரிந்து கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications