ஈராக்: மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி!
பாக்தாத்: ஈராக் நாட்டில் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 11 பிறந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக் நாட்டில் மேற்கு பாக்தாத்தில் உள்ள யார்மோக் மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்றிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் இருந்த 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குழந்தைகள் அனைத்தும் முன் கூட்டியே பிறந்த குழந்தைகள் என கூறப்படுகிறது. மேலும், தீ விபத்தில் சிக்கியிருந்த 7 குழந்தைகள் மற்றும் 29 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஈராக் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அல்-ருத்தானி தெரிவித்துள்ளதாவது: நேற்றிரவு யார்மோக் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்பட்டது தெரியவந்துள்ளது என்று கூறினார்.
ஈராக் நாட்டில் மின்கசிவினால் விபத்து ஏற்படுவது சகஜமானதுதானாம். அந்நாட்டில் உரிய பாதுகாப்பு இல்லாத மோசமான வயரிங் செய்யப்படுவதால் தான் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது.