பிணைக் கைதிகளை 'வேட்டையாடும்' ஹமாஸ்? 13 பேர் பலி.. இஸ்ரேல் மீது பழி- 100க்கும் மேற்பட்டோர் கதி என்ன?
டெல் அவிவ்: இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்து சென்றவர்களில் 13 பேர் பலியானதாகவும் இஸ்ரேல் தாக்குதலில் இவர்கள் உயிரிழந்ததாகவும் பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகள் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாலஸ்தீன தாயக நிலப்பரப்பில் இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் ஜிஹாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த யுத்தத்தின் உச்சமாக இஸ்ரேல் மீது இறுதிப் போர் என்ற பிரகடனத்துடன் உக்கிரமான தாக்குதலை ஹமாஸ் ஜிஹாதிகள் நடத்தினர். இதனால் இஸ்ரேல் நிலை குலைந்தது.

இஸ்ரேலுக்குள் ஊடுவிய ஆயுதம் தாங்கிய பாலஸ்தீன ஜிஹாதிகள், இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர் என 100க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த பிணைக் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் கடும் பேரழிவுதான் என அறிவித்த இஸ்ரேல், காஸா நிலப் பரப்பை பேரழிவு ஆயுதங்களால் அழித்து நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 6-வது நாளாக நீடிக்கிறது. இந்த யுத்தத்தில் இதுவரை 5,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒரு பக்கம் களமிறங்கி உள்ளன. இன்னொரு பக்கம் பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகளுக்கு ஆதரவாக அரபு நாடுகள் வரிந்து கட்டி நிற்கின்றன. இஸ்ரேலும் சிரியா, எகிப்து நாடுகள் மீது தாக்குதலை திசை திருப்பி இருக்கின்றன.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் பிளிங்கன், நேரடியாக இஸ்ரேலுக்கு சென்று, ஒரு யூதனாக ஓடி வந்துள்ளேன் என ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார். இந்த யுத்தத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் ஜிஹாதிகளிடம் அமெரிக்கர்களும் பிணைக் கைதிகளாக சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் தங்களிடம் இருந்த பிணைக் கைதிகளில் 13 பேர் பலியாகிவிட்டனர்; இஸ்ரேல் நடத்திய காஸா மீதான தாக்குதலால் இவர்கள் உயிரிழந்தனர் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹமாஸ் ஜிஹாதிகளின் பிடியில் இன்னும் எத்தனை பிணைக் கைதிகள் உள்ளனர் என்பது உறுதியாக தெரியாத நிலையே நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications