13 வயது கொலையாளிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை: பாக். கோர்ட் அதிரடி உத்தரவு
இஸ்லாமாபாத்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் ஒருவனுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.
பாகிஸ்தான், லாகூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது குர்ஜன்வாலா பகுதி. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சண்டை ஒன்றில் ஒரு நபரை ஹபிஸ் கியாஸ் என்பவர் கொல்ல முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக குர்ஜன்வாலா மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹபிஸை பாதிக்கப்பட்ட நபரின் 13வயது மகன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
அதனைத் தொடர்ந்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு விசாரணை அதே குர்ஜன்வாலா மாவட்டத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிறுவன் கோஹர் நவாசுக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
சிறுவன் ஒருவனுக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications