அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்: கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாகி வருக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் 18 வயதுள்ள மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பிஞ்சு குழந்தைகள் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 ஆசிரியர்களையும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார்.
இச்சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு கலாசாரம் என்பது நீண்டகாலமாக தொடரும் பிரச்சனையாக உள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 52% அதிகரித்துள்ளன. கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications