சீனாவில் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல்... 15 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவின் பதட்டத்துக்குரிய ஜின்ஜியாங் மாகாணத்தில் நடந்த அதிரடியான தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்தில் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
ஜின்ஜியாங் மாகாணத்தின் ஷாசே கவுன்டி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வாகனங்களில் வந்த தீவிரவாதிகள், கத்திகள், வெடிகுண்டுகளை வைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும், கண்ணில் பட்டவர்களை சரமாரியாக தாக்கியதாகவும் டியான்ஷான் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் நெரிசல் மிக்க தெருவில் இந்த சம்பவம் நடந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கடந்த ஜூலை மாதமும் இதேபோல ஷாசே பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது நினைவிருக்கலாம். அப்போது நடந்த தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூலை மாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 12 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தாக்குதல் நடந்த பகுதியானது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீருக்கு அருகே உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானும் அருகாமையில் உள்ளது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லீ்ம்கள் வசித்து வருகிறார்கள். கடந்த பல வருடமாகவே உய்குர் முஸ்லீம்கள், சீனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கும் ஹான் சீன மக்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இது வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறைக்கு அல் கொய்தா ஆதரவைப் பெற்ற கிழக்கு துர்க்மேனிஸ்தான் இஸ்லாமிய அமைப்பு போராளிகள்தான் காரணம் என்று சீனா குற்றம் சாட்டுகிறது. இவர்கள்தான் உய்குர் முஸ்லீம்களைத் தூண்டி விடுவதாகவும் அது கூறுகிறது.












Click it and Unblock the Notifications