துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 18 பேர் பலி.. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோகம்
Recommended Video
அங்காரா: துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 18 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கியின் கிழக்கே எலோஜிக் மாகாணத்தின் சிவ்ரைஸ் நகரில் சிறிய ஏரிப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேஜையில் இருந்த பொருட்கள் உருண்டோடின.
இதையடுத்து குடியிருப்புவாசிகள் அலறி அடித்து கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்திற்கு அந்த பகுதியில் 8 பேர் பலியாகிவிட்டனர். அது போல் நாட்டின் தென்மேற்கே மலத்தியா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் பலியாகிவிட்டனர்.
இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் சுமார் 60 முறை அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதிக்கு 400-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா, ஜார்ஜியா, ஆர்மேனியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. கடந்த 1999-ஆம் ஆண்டு துருக்கியின் மேற்கே இஸ்மித் நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்திற்கு 17 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications