பாகிஸ்தானில் 250 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி, 40 காயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 250 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 19 பேர் பலியாகினர், 40 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் சக்வால் மாவட்டம் சீச்சா வாத்னி பகுதியைச் சேர்ந்த 60 பேர் ஒரு பேருந்தில் காரா ஷரீப் பகுதியில் உள்ள தர்கா ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த பேருந்து நேற்று இரவு காலா கஹார் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது 250 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 19 யாத்ரீகர்கள் பலியாகினர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பேருந்தில் அளவுக்கு அதிகமானோரை ஏற்றியதும், பிரேக்குகள் செயல் இழந்ததும் தான் விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் பலியாவதாக அந்நாட்டு போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.