காபூல் தாக்குதல் : தேடி தேடி சுட்டுக்கொன்ற தலிபான் தீவிரவாதி - 4 இந்தியர் உட்பட 14 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் விருந்தினர் மாளிகையில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் மற்றும் ஒர் அமெரிக்கர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள பார்க் பேலஸ் என்ற நட்சத்திர விருந்தினர் மாளிகைக்குள், நேற்று நள்ளிரவு புகுந்த தீவிரவாதிகள் அங்கு தங்கி இருந்த வெளிநாட்டினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மேலும் பல வெளிநாட்டினரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர். உடனே ராணுவ வீரர்களும், போலீசாரும் விருந்தினர் மாளிகையை சுற்றி வளைத்தனர் அவர்கள் தீவிரவாதிகளை நோக்கி எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.
நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கி விடிய விடிய இருதரப்புக்கும் இடையே 7 மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கி சண்டை நீடித்தது.

தேடி தேடி சுட்ட தீவிரவாதி
தீவிரவாதிகள் வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். பயங்கரவாதி ஒருவன் விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று தேடி, அங்கிருந்தவர்களை சுட்டுக் கொன்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
4 இந்தியர் பலி
இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது 6 இந்தியர்கள் விடுதியில் தங்கியிருந்த நிலையில் மூன்று ஆண் ஒரு பெண் உட்பட 4 இந்தியர்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். 2 பேர் போலீசாரால் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதேபோல் ஓட்டலின் மற்ற இடங்களில் நடந்த தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
இதற்கிடையே ராணுவம் நடத்திய எதிர்தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த விருந்தினர் மாளிகையில் சிக்கி இருந்த 54 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
இந்திய தூதர் உறுதி
இந்த விருந்தினர் மாளிகையில் வெளிநாட்டினர்தான் அதிகம் தங்குவார்கள். இதுதவிர வெளிநாட்டு உதவி நிறுவன பணியாளர்களும் தங்கி இருந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய தூதர் அமர்சின்ஹா, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 இந்தியர்களும் உயிரிழந்துள்ளதாக ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.
தலிபான் தீவிரவாத அமைப்பு
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளதாக மின்அஞ்சல் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆப்கானிஸ்தானில் நேற்று சுற்றுப்பயணம் செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பினார். அவர் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் ஆப்கானிஸ்தானின் எதிரிகள் பாகிஸ்தானுக்கும் எதிரிகள் என நேற்று பிரகடனம் செய்தார். இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானில் மத்திய அரசு தொடர்பு கொண்டு பேசி வருகிறது.
இசையை ரசித்துக்கொண்டே
காபூலில் உள்ள பார்க் பேலஸ் விருந்தினர் மாளிகை பிரபலமானதாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பணியாளர்களால் எந்த நேரமும் நிரம்பி வழியும் இந்த விடுதியில் சம்பவம் நடந்த போது ஆப்கானிஸ்தான் நாட்டு பாரம்பரிய இசை கலைஞர் அல்டாப் உசைனின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதை வெளி நாட்டினர் ரசித்துக் கொண்டு இருந்தனர். அப்போதுதான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்த தொடங்கினர். இன்று அதிகாலை தாக்குதல் முடிந்ததும் அந்த விருந்தினர் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். ஓட்டலுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பிரதமர் மோடி இரங்கல்
ஆப்கானில் விருந்தினர் மாளிகையில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் மற்றும் ஒர் அமெரிக்கர் உள்பட 14 பேர் பலியானவர்க குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார்.
ஆப்கான் அதிபரிடம் உறுதி
காபூல் விருந்தினர் மாளிகை தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கான் அதிபர் அஷரஃப் கனியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 4 இந்தியர்கள் பலியானதற்கு, மோடியிடம் ஆப்கன் அதிபரும் வருத்தம் தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications