2 நியூயார்க் போலீஸார் சுட்டுக் கொலை.. 'பழிக்குப் பழி' வாங்கிய கருப்பர் இன வாலிபர் தானும் தற்கொலை
நியூயார்க்: அமெரிக்காவின் கருப்பர் இனத்தவரை போலீஸார் சுட்டுக் கொல்லும் சம்பவங்களுக்குப் பழி வாங்கும் வகையில், இரண்டு கருப்பர் அல்லாத போலீஸாரை ஒரு கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொன்று விட்டு தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நியூயார்க்கின் ப்ரூக்ளின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட போலீஸாரின் பெயர்கள் ரஃபேல் ரமோஸ் மற்றும் வென்ஜியான் லியூ. இருவரும் தலையில் வைத்து சரமாரியாக சுடப்பட்டதால் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.
இதில் ரமோஸ் டிரைவர் சீட்டில் இருந்தார். அவருக்கு அருகில் வென்ஜியான் அமர்ந்திருந்தார். பின்னால் வந்து இந்த இருவரையும் அந்த கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொன்றுள்ளார்.
சுட்டுக் கொன்ற நபரின் பெயர் இஸ்மாயில் பிரின்ஸ்லி. இவர் பால்டிமோரைச் சேர்ந்தவர். இருப்பினும் அட்லாண்டாவில் இவருக்கு ஒரு வீடு உள்ளது. ப்ரூக்ளினுிக்கு இவர் ஏன் வந்தார் என்பது தெரியவில்லை.
பிரி்ன்ஸ்லிக்கு எந்தத் தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்று நியூயார்க் போலீஸ் கமிஷனர் வில்லியம் பிராட்டன் கூறியுள்ளார். அதேசமயம், கருப்பர் இனத்தவர் மீதான போலீஸ் தாக்குதலால் அவர் கோபமடைந்திருந்தார் என்றும் கருப்பர் அல்லாத போலீஸாரைப் பழிவாங்குவேன் என்று அவர் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே பால்டிமோரில் தனது மாஜி காதலி ஒருவரை சுட்டுப் படுகாயப்படுத்தியவர் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு போலீஸாரையும் சுட்டுக் கொன்ற பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய பிரின்ஸ்லி அருகில் உள்ள சப்வேயில் வைத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து விட்டார். அவரது உடலை போலீஸார் மீட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ரமோஸுக்கு 40 வயது ஆகிறது. லியூவுக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணமே நடந்தது. இருவரும் ப்ரூக்ளின் நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்காவில் கடந்த ஜூலை 17-ம் தேதி 63 வயது எரிக் கார்னர், ஆகஸ்ட் 9 ம் தேதி 18 வயதான மைக்கேல் பிரௌன் ஆகிய கருப்பர் இனத்தவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கருப்பர் இனத்தவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும் பிரவனை சுட்டுக் கொன்ற போலீஸ்காரரை விடுவித்து கோர்ட் உத்தரவிட்டது பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து கடந்த 13ம் தேதி கடும் பனியையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்ததால் அமெரிக்காவே அதிர்ந்தது.
இந்த நிலையில்தான் கருப்பர் அல்லாத இரண்டு போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.