வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லாவிட்டால் 2 ஆண்டு சிறை, ரூ.61,000 அபராதம்! மலேசிய மாகாணத்தில்!
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள தெரெங்கானு மாகாணத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையை புறக்கணிக்கும் இஸ்லாமியர்களுக்கு 2 ஆண்டு சிறையும், சுமார் ரூ.61 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்த உத்தரவின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
மலேசியா இஸ்லாமிய நாடாக உள்ளது. இங்குள்ள மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இதற்கு அடுத்தப்படியாக புத்த மதம், கிறிஸ்தவ மதம், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் வசித்தாலும் கூட அவரவர் வழிபாடு முறைகளை பின்பற்ற மலேசியாவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை ‛மிஸ்' செய்தால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமியர்களை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை தொழுகை மிகவும் முக்கியமானதாகும்.
ஷரியா சட்டம்
இப்படியான சூழலில் தான் வெள்ளிக்கிழமை தொழுகையை புறக்கணிக்கும் இஸ்லாமியர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மலேசியாவில் தெரெங்கானு என்ற மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் தான் ஷரியா சட்டப்படி இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
2 ஆண்டு சிறை + அபராதம்
தெரெங்கானு மாகாணத்தை ஆளும் Pan - Malaysian Islamic Party (PAS) என்ற கட்சி இதனை அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை தொழுகையை இஸ்லாமியர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஒருவேளை வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லாவிட்டால் அதற்கான சரியான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
மாறாக சரியான காரணம் இன்றி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லாவிட்டால் அது குற்றமாக கருதப்படும். அதற்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது 3 ஆயிரம் ரிங்கிட் (மலேசியா கரன்சி - இந்திய மதிப்பில் சுமார் ரூ.62 ஆயிரம்) அபராதமாக விதிக்கப்படும். இல்லாவிட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை + அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இதுபற்றி தெரெங்கானுவின் சட்டசபையின் உறுப்பினர் முகமது காலித் அப்துல் ஹாதி கூறுகையில், ‛‛வெள்ளிக்கிழமை தொழுகை என்பது வெறும் மத அடையாளத்துக்கானது அல்ல. இது முஸ்லிம்களுக்கு இடையே கீழ்பணிவதை பிரதிபலிக்கிறது. இதனால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது'' என்றார்.
வெள்ளிக்கிழமை தோறும் தெரெங்கானு மகாணத்தில் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்லாமியர்கள் தொடர்ந்து 3 தொழுகைகளை மிஸ் செய்யும்போது 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,609) வரை அபராதம் விதிக்கும் முறை நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளம்பிய எதிர்ப்பு
இந்த புதிய உத்தரவுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஆசியாவின் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் வழக்கறிஞர்கள் பிரிவின் இயக்குநர் பில் ராபர்ட்சன் கூறுகையில், ‛‛இதுபோன்ற சட்டங்கள் இஸ்லாம் மதத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்.
மதத்தின் மீதான நம்பிக்கை மற்றும் மதசுதந்திரம் எப்படி இருக்கிறதோ அதேபோல் தொழுகையில் பங்கேற்காமல் இருப்பதற்கும் உரிமை உள்ளது. இதனால் தெரெங்கானு அதிகாரிகள் இந்த கொடூரமான சட்டத்தின் மூலமாக மனித உரிமைகளை மீறுகிறார்கள். இதனால் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications