மாலியில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 20 இந்தியர்களும் மீட்பு: வெளியுறவுத் துறை தகவல்
பமாகோ: மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள ராடிசன் ப்ளு ஹோட்டலில் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக் கைதிகளாக இருந்த 20 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மாலி நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அரசிடம் பணம்கேட்டு மிரட்டியும் வருகின்றது. பணம் தராவிட்டால் பிடித்து வைத்திருக்கும் மக்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாலி தலைநகர் பமாகோவில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலுக்குள் திடீரென புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும், ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள், ஊழியர்கள் என 170 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அந்த ஹோட்டலில் 20 இந்தியர்கள் தங்கியிருந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
பதிலுக்கு உள்ளே இருக்கும் தீவிரவாதிகளும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்த ஹோட்டல் இருக்கும் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காணப்படுகிறது. பிணைக்கைதிகளில் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதையடுத்து, சிறப்பு படையினர் ஹோட்டலுக்குள் நுழைந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மாலி ராணுவத்திற்கு உதவும் விதமாக பிரான்ஸ் ராணுவமும் அந்த ஹோட்டலை சுற்றி வளைத்துள்ளது. உள்ளே நுழைந்த சிறப்பு படையினர் 80 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த இந்தியர்கள் 20 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர் என்று மாலியில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது என வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்களுடன் அங்குள்ள இந்திய தூதர் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.