ஒரே நேரத்தில் ஒன்றாக பாலத்திலிருந்து குதித்த 245 பேர்.. வைரலான வீடியோ!
பிரேசிலில் ஒரே நேரத்தில் 245 பேர் ஒன்றாக பாலத்தில் இருந்து கீழே குதித்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து ஒரே நேரத்தில் 245 பேர் கீழே குதித்துள்ளனர். தற்போது அவர்கள் செய்த இந்த விசித்திரமான செயல் இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது. கின்னஸ் சாதனை படைப்பதற்காக அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றது ஹோர்டோலாண்டியா என்ற பகுதி. இந்த பகுதியில் உள்ள மிக நீண்ட பாலத்தில் அடிக்கடி கயிறு கட்டி கீழே குதிக்கும் சாகச விளையாட்டு நடப்பது வழக்கம். சாகச விரும்பிகள் அதிகம் பேர் இதில் கலந்து கொள்வார்கள். 'பங்கி ஜம்பிங்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விளையாட்டு அங்கு மிகவும் பிரபலம்.
இந்த நிலையில் இந்த சாகச விளையாட்டில் புதிதாக ஒரு சாகசத்தை நிகழத்தி இருக்கின்றனர் பிரேசில் மக்கள். அதனபடி அந்த பாலத்தில் இருந்து 245 பேர் ஒன்றாக ஒரே நேரத்தில் கயிறு கட்டியபடி கீழே குதித்துள்ளனர். 30 மீட்டருக்கும் அதிகமான உயரம் உள்ள இந்த பாலத்தில் இருந்து அவர்கள் திரில்லாக குதித்ததை அந்த குழு தற்போது வீடியோவாக வெளியிட்டுள்ளது.
கடிகாரத்தில் இருக்கும் பெண்டுலம் போல் அவர்கள் இந்த வீடியோவில் மேலே இருந்து வேகமாக கீழே இறங்கி விழுந்துள்ளார். இந்த சாகசம் கின்னஸ் சாதனைக்காக செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் கின்னஸ் குழுமம் இந்த சாகசத்தை பார்த்து அவர்களை அங்கீகரிக்கவில்லை.
ஏற்கனவே இதே போல் 149 ஒரேநேரத்தில் பாலத்தில் இருந்து குதித்து இருக்கின்றனர். அவர்களில் சாதனையை தற்போது இந்த குழு முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.