இங்கிலாந்தில் இன்று 2வது ஒருநாள் போட்டி: சர்ச்சைகளுக்கு அஞ்சி பேட்டி கொடுப்பதை தவிர்த்த டோணி
லண்டன்: இந்தியா-இங்கிலாந்து நடுவேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. சர்ச்சைகள் காரணமாக செய்தியாளர்களை சந்திப்பதை இந்திய அணி கேப்டன் டோணி தவிர்த்துவிட்டார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிப் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன.

முதல் போட்டி ரத்து
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், 25ம்தேதி நடைபெற வேண்டிய முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இன்றைய போட்டியின் போதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களிடமிருந்து ஓட்டம்
இதனிடையே, சர்ச்சைகள் காரணமாக மீடியாக்களிடம் பேசுவதை இந்திய அணி நிர்வாகம் தவிர்த்துவிட்டது. எப்போதுமே போட்டிக்கு முந்தையநாள் பத்திரிகையாளர்களை அணியின் கேப்டன் சந்திப்பது வழக்கம். ஆனால் 2வது ஒருநாள் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

டோணியின் சர்ச்சை பேச்சு
டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றதை தொடர்ந்து, பயிற்சியாளர் பிளட்சர் டம்மியாக்கப்பட்டு உதவி பயிற்சியாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டனர். அணிக்கு இயக்குநர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். ஆனால் பிளட்சர்தான் எங்கள் 'பாஸ்', சாஸ்திரி சும்மா மேஸ்திரிதான் என்பதுபோல டோணி கருத்து தெரிவித்திருந்தார்.

எதுக்கு வம்பு!
டோணியின் கருத்தை பிசிசிஐ கடுமையாக எதிர்த்தது. அணியின் நிர்வாகத்தில் டோணி தலையிடுவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்தால் இந்த மோதல் குறித்த கேள்வி வரும் என்பதால் நிருபர்களுடனான சந்திப்பை டோணி தவிர்த்துவிட்டார்.












Click it and Unblock the Notifications