"பதற்றம்"! உக்ரைன்- போலந்து எல்லையில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்.. 35 பேர் பலி, பலர் படுகாயம்
கீவ்: உக்ரைன் நாட்டில் 3ஆவது வாரமாகப் போர் தொடரும் நிலையில், உக்ரைன் போலந்து எல்லையில் உள்ள நகரங்களிலும் ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 18ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
போரை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தை
ஒரு புறம் பேச்சுவார்த்தை நடைபெறும் போதிலும், மறுபுறம் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களான கார்கீவ், மரியுபோல் நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உடனடியாக போரை நிறுத்தி விட்டு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது.

35 பேர் பலி
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதிகளிலும் இப்போது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. போலந்து எல்லையில் அமைந்துள்ள உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகருக்கு வெளியே உள்ள ராணுவ தளத்தைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். ரஷ்ய ராணுவம் மொத்தம் 8 ஏவுகணைகளை அனுப்பி உள்ளது. இதில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதில் குறைந்தது 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

துறைமுக நகரம்
அதேபோல தெற்கு உக்ரைன் நகரங்களில் ஒன்றான மைகோலைவ் நகரைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் நடத்தி ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் நகரிலும் தொடர்ந்து ரஷ்யப் படைகளால் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் காரணமாக இரு நாட்டு ராணுவ வீரர்கள் மட்டுமின்றி 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், இத பேரழிவு என்று உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
Recommended Video

அப்பாவி மக்கள்
உக்ரைன் தலைநகரில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் பெரெமோகா. இந்த கிராமத்தில் இருந்து சிலர் அறிவிக்கப்பட்ட 'பசுமை' வழித்தடத்தில் வெளியேற முயன்றனர். அப்போது ரஷ்ய ராணுவம் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்த கொடூரச் செயலில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது. போர் தொடர்வதால் இரு நாட்டு ராணுவம் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் இதுபோல கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications