4 நாளில் 2வது முறை.. அதிகாலையிலேயே அதிர்ந்த பூமி.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி
ஆப்கானிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று அதிகாலையில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 நாட்களில் 6.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்தில் துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலி எண்ணிக்கை என்பது 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பல நாடுகளிலும் தற்போத ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. வடகிழக்கு மாநிலங்கள், லடாக் உள்ளிட்ட பல இடங்களில் சில நாட்களுக்கு முன்பு நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் சென்னையிலும் கூட நிலஅதிர்வு ஏற்பட்டதாக கூறி மக்கள் அலுவலகங்களில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

அதிகாலையிலே நிலநடுக்கம்
இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் ஆப்கானிஸ்தானில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இன்று அதிகாலை 2.14 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலிலும் பதிவாகி உள்ளது. முதற்கட்ட தகவல்படி அதிர்ஷ்டவசமாக உயிர் பலி, சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

4.3 என ரிக்டரில் பதிவு
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை இந்தியாவின் நிலஅதிர்வுக்கான தேசிய மையம் பதிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம், ‛‛ஆப்கானிஸ்தானில் பைசாபாத் அரகே ரிக்டரில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது பைசாபாத் நகரின் கிழக்கு வடகிழக்கு பகுதியில் 273 கிலோமீட்டர் தொலைவில் 180 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்களில் 2வது முறையாக...
முன்னதாக கடந்த வியாழக்கிழமை காலை 6.07 மணிக்கு இதேபோல் பைசாபாத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. தற்போது 4 நாட்களுக்குள் 2வது முறையாக பைசாபாத் நிலநடுக்கத்துக்கு உள்ளாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பபு நியூ கினியாவிலும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் தவிர இன்று காலையில் பபு நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவில் பதிவாகி இருந்தது. முன்னதாக நேற்று ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் 6.1 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எதுவும் ஏற்படவில்லை. இந்த மாதம் மட்டும் வழக்கத்துக்கு மாறாக இந்தியா உள்பட பல நாடுகள் நிலநடுக்கத்தை சந்தித்து வருகின்றன. அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கங்கள் சக்தி குறைந்து இருப்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications