விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க முயற்சி!: மலேசியாவில் 4 பேர் கைது!!
கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியாவில் மீண்டும் தொடங்க முயன்றதாக 4 இலங்கைத் தமிழர்களை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
மலேசியாவின் உள்ள கலாங் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கியிருந்தபோது இந்த 4 பேரையும் கைது செய்ததாக மலேசிய தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவை மையமாக வைத்து..
இது குறித்து இந்த போலீஸ் பிரிவின் ஐ.ஜி. காலித் அபு பக்கர் கூறுகையில்,
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மலேசியாவை மையமாக கொண்டு தங்களது இயக்கத்தை உயிர்ப்பிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

அகதிகள் என்ற பெயரில்...
அவர்கள் அகதிகள் என்ற பெயரில் மலேசியாவில் தங்கியிருந்தபடி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். மலேசிய போலீசார் இங்கிருந்து செயல்படும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணித்தபோது அவர்கள் சிக்கினர். இவர்கள் மலேசியாவை தங்களது மையமாக வைத்துக் கொண்டு பல்வேறு தீவிரவாத தகவல்களை பரிமாறுதல், ஆயுதங்களை கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

சந்திரிகாவை கொல்ல முயன்றவர்..
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவை கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி கொழும்பு டவுன்ஹாலில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் கொலை செய்ய நடந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இன்னொரு நபர் வெடிகுண்டுகளை தயாரிப்பதில் திறமை வாய்ந்தனர்.

சென்னை, பெங்களூர் சதிகளில் தொடர்புடையவர்..
3-வது நபர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாக கடந்த மே மாதம் 14ம் தேதி கைதான நபரின் கூட்டாளி ஆவார். இவர் வெளிநாட்டு மாணவருக்கான அனுமதி அட்டையும், வணிகம் செய்வதற்கான அடையாள அட்டையும் வைத்துள்ளா. அவரிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள், மற்றும் குடியுரிமை அதிகாரிகளுக்கான ரப்பர் ஸ்டாம்பு உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்துள்ளோம்.

4வது நபர்...
4-வது நபர் வெளிநாடுகளில் இருந்து ரகசிய தகவல்களை திரட்டுவதிலும் போலி பாஸ்போர்ட்டு உள்ளிட்ட பல்வேறு போலி தஸ்தாவேஜுகளை உருவாக்குவதிலும் தேர்ந்தவர் ஆவார். இவர்களில் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அடையாள அட்டை வைத்துள்ளார்.

மேலும் 3 பேர் கைது...
இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்ட திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்க திட்டமிட்டதாக கடந்த மே மாதமே மேலும் 3 பேரை கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார் காலித்.












Click it and Unblock the Notifications